Showing posts with label ஐ திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label ஐ திரைவிமர்சனம். Show all posts

ஐ திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களும், இந்த உலகமும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு படம் ஐ. ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் விக்ரமின் வெறித்தனமான உழைப்பில் எமிஜாக்ஸனின் அழகில் பி.சி.ஸ்ரீராமின் செதுக்கலில் ஏ.ஆர்.ரகுமானின் தாலாட்டில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் ஐ.
அர்னால்ட்டை போல ஆணழகன் ஆகவேண்டும் என்ற கனவோடு சிறுவயதில் இருந்து உடம்மை ஏற்றி வரும் லிங்கேசன் (சீயான் விக்ரம்) மிஸ்டர் தமிழ்நாடு போட்டில் கலந்து கொள்கிறார். தன்னை இவன் வீழ்த்திவிடுவான் என்று பயந்த சக போட்டியாளர் ரவி இவரை அடித்து துவைக்க நினைக்க அது நேர்மாறாக நடந்து விக்ரம் வெற்றி பெறுகிறார்.
மாடலிங் மற்றும் விளம்பரத்துறையில் கொடிகட்டி பறக்கும் தியாவின் (எமிஜாக்ஸன்) தீவிர ரசிகர் விக்ரம், அவரது விளம்பரம் வந்தாலே வாயை பிளந்து கொண்டு பார்ப்பார். தியாவுடன் ஜோடியாக நடிக்கும் ஜான் தொடர்ந்து தியாவை பாலியல் தொந்தரவு செய்கிறார். இது பிடிக்காத தியா அவரது குடும்பத்தின் டாக்டரான வாசுதேவனிடம் (சுரேஷ் கோபி) சொல்ல அவர் ஜானை மிரட்டுகிறார்.
இதில் கோவமடைந்த ஜான் (உப்பன்பட்டேல்) தியாவை அனைத்து விளம்பரத்திலிருந்தும் ஒதுக்க முடிவு செய்து தியாவின் மார்க்கெட்டை உடைக்கிறார். இந்நிலையில் எமி ஆணழகன் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருக்கும் லிங்கேசனை ஒஜஸ் ராஜானியின் உதவியுடன் (உலகின் நம்பர் 1 மேக்கப்மேன்)(திருநங்கை) லீ என்ற மாடலாக மாற்றுகிறார். பக்கா லோக்கலான விக்ரமிற்கு தன் தேவதையை கட்டிபிடித்து நடிப்பது கூச்சமாக இருக்க, சுத்தமாக நடிப்பு வரவில்லை. இதனால் லீ யிடம் இருந்து நடிப்பை வரவழைக்க அவரை காதலிப்பதாக பொய் சொல்கிறார் தியா.
இதை உண்மை என்று நம்பும் லீ தியாவை துறத்தி துறத்தி காதலிக்கிறார், விளம்பரத்தின் படபிடிப்பு முடிவதற்கு முன்பாகவே தியா உன்னை காதலிக்கவில்லை அவள் காதலிப்பதாக நடிக்கிறாள் என்று ஒஜஸ் உண்மை லீ யிடம் சொல்ல சோகத்தில் மூழ்கிறார் விக்ரம். ஒஜஸ்க்கு விக்ரமின் மீது காதல் இதனால் அந்த உண்மையை சொல்ல அதுவே அவர்கள் இருவருக்கும் உண்மையான காதலாக மாறுகிறது.
லீ-தியா நடித்த விளம்பரங்களால் ராம்குமாரின் (சிவாஜியின் முத்தமகன் ராம்குமார்) அனைத்து பொருட்களுக்கும் மார்கெட்டில் நல்ல விற்பனையாக ஜான்னை கழட்டிவிட்டு லீ-தியாவை அனைத்து விளம்பரங்களுக்கும் புக் செய்கின்றனர். இதனால் ஜான்னிற்கு விளம்பர வாய்ப்பு பரிபோகிறது. விளம்பரப் படத்தில் நடித்தாலும் தனக்கென்று ஒரு பாலிசியை வைத்திருக்கிறார் விக்ரம். அதாவது கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களின் விம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்பதுதான் அப்பாலிசி. இதனால் ராம்குமாருடன் பகை ஏற்படுகிறது.
லீ-தியா இவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்கின்றனர். சிறுவயதில் இருந்தே தியாவை திருமணம் செய்ய வேண்டும் என்று துடித்துகொண்டிருக்கும் டாக்டர் வாசுதேவன் விக்ரமுக்கு மறைமுக எதிரியாகிறார். இப்படி விக்ரமை சுற்றி இருக்கும் ரவி, ஒஜஸ், ஜான், இந்திரகுமார், டாக்டர் ஐவரும் சேர்ந்து விக்ரமை எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். அப்போது தான் டாக்டர் அவனது அழகு, உடல் இரண்டையும் சிதைக்க ஐ என்ற வைரஸ் ஒன்றை விக்ரமின் உடம்பில் ஏற்றுகிறார்.
இதனால் விக்ரமின் அழகும், உடம்பும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி அகோரமாக மாறுகிறார்.அதனால் தியாவுடன் அவருக்கு நடக்கவிருந்த கல்யாணமும் நின்றுவிடுகிறது, டாக்டர் இந்திரகுமார் மாப்பிளையாக மாறுகிறார். (இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…!). இவருக்கு இப்படி நடந்ததற்கு காரணம் வியாதி என்று நம்பிக்கொண்டிருக்கும் விக்ரமுக்கு இவர்கள் ஐவரின் மூலமாக உண்மை தெரியவருகிறது.
விக்ரமை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த ஐவரையும் விக்ரம் சாகடிக்காமல் அதுக்கும் மேல..அதுக்கும் மேல என்று அந்தியன் படத்தை போல வித்தியாசமான முறையில் தண்டிக்கிறார். விக்ரம் இப்படி ஆகிவிட்டார் என்ற உண்மை எமிஜாக்ஸனுக்கு தெரிந்ததா..??? அவர் விக்ரமை ஏற்றுக்கொண்டாரா…?? என்பது கிளைமேக்ஸ்.
முதலில் பாடிபில்டராகவும், பிறகு மாடலாகவும், இறுதியில் கூன்விழுந்த அகோர தோற்றம் என இந்த படத்திற்காக விக்ரம் கடிமாக உழைத்த உழைப்பிற்கு அவரை பாராட்டியே ஆகவேண்டும். மனுஷன் பின்னி எடுத்திருக்கார் நடிப்பில் அவருக்கு கோடி பாராட்டுகள்.
எமி ஜாக்ஸன் என்ன அழகு…ஒவ்வொரு காட்சியிலும் நம்மை மூழ்கடிக்கிறார், டூ பீஸ், லிப்லாக் காட்சிகள் கூட இருக்கிறது. படம் மாடலிங் சம்பந்தப்பட்ட கதை என்பதால் அப்படியே கதையோடு பக்காவாக பொருந்தியிருக்கிறார். இவரது அழகு உங்களை மெர்சலாக்கும் கட்டாயம்.
சந்தானத்தின் காமெடி படத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் அசத்தல். அதிலும் உருக்குலைந்து கிடக்கும் வில்லன்களிடம் சந்தானம் எடுக்கும் பேட்டி படு சூப்பர். பவர் ஸ்டார் கூட சில காட்சிகளில் வந்து நம்மை சிரிக்கவைக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல் ஏற்கனவே பட்டயகிளப்புகிறது, பின்னனி இசையில் இன்னும் மிரட்டியிருக்கிறார். பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதில் காட்சிகள் ஒவ்வொன்றையும் சிற்பங்களை போல செதுக்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவை இந்த படத்தின் மூலம் உலக சினிமா அளவிற்கு எடுத்து சென்றிக்கும் இயக்குனர் ஷங்கரை முதலில் பாராட்டியே ஆகவேண்டும். என்ன தான் நாம் பார்த்த கதையாகவே இருந்தாலும் ஷங்கரின் இயக்கத்தில் அது சற்று தூக்கலாக தெரிகிறது. பிரம்மாண்டமான காட்சிகளை உருவாக்கும் இவர் திரைக்கதையையும் அதே போல் உருவாக்கி இருக்கிறார் நம்மை வியக்கவைக்கிறார். இருந்தாலும் படம் சற்று நீளமாகத்தான் இருக்கிறது அதை மட்டும் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் ஐ உங்களை எல்லாம் வியக்கவைக்கும்.