கப்பல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனம் பாஜ்வா, சமீபத்திய தமிழ் திரை உலகின் புதிய வரவுகளில் மிக பிரகாசமான எதிர் காலம் உள்ளவர் என திரை உலக வல்லுனர்களால் கணிக்கபடுகிறவர். அவரது முதல் படமான ‘கப்பல்’ பெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி மிக மிக உற்சாகத்தில் இருக்கும் அவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். கோதுமை நிறமும,உடற்கட்டும் அவருக்கும் பஞ்சாப் மண்ணுக்கும் உள்ள ஜென்ம தொடர்பை பறை சாற்றும்.
நான் பஞ்சாப்பை சேர்ந்தவள் ஆனால் எனக்கு பெரும்பாலும் நண்பர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் தான். நாடே போற்றும் ஒரு இயக்குனரான சங்கர் சாருடைய தயாரிப்பில் என்னுடைய முதல் படம் வெளியானது எனக்கு மிக மிக பெருமை. கப்பல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை உலகின் முக்கிய தூண்களான விஜய் சார், விக்ரம் சார், ஏ.ஆர்.ரகுமான் சார், ஷங்கர் சார் அனைவரையும் ஒரே மேடையில் சந்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர்களது கனிவான வார்த்தைகளும், ஊக்கமும் என்னை உற்சாகமூட்டியது. இதற்க்கு பிறகு நான் விஜய் சாருக்கு தீவிர ரசிகை ஆகிவிட்டேன்.
எளிமையாக அதே நேரம் எல்லோரையும் கவரும் காந்தமுமாக இருந்தார், அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவருடன் ஜோடியாக ஒரு படம் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். அது இந்த வருடமே கை கூடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
கப்பல் படத்துக்கு பிறகு எனக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அதன் சம்மந்தமாக விரைவில் முறையான அறிவிப்பை வெளியிடுவோம். நான் சமீபமாக மேலும் நிறைய தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். திரை உலகின் நுணுக்கங்களை அந்த படங்கள் மூலம் கற்றுக் கொண்டு வருகிறேன் என்று தன்னுடைய வசீகர புன்னகையோடு சொல்கிறார் சோனம் பாஜ்வா.